Thursday, 15 March 2012

புவி வெப்பமயமாதல்


முதலில் புவிவெப்பமயமாவது குறித்த முழுமையான தகவல்கள் மக்களிடம் தெரிவிக்கப்படவேண்டும். 2030 ல் இருந்து 2040 க்குள் பூமியின் வெப்பநிலை இரண்டிலிருந்து மூன்று டிகிரி உயரப்போகிறது, இந்த தகவல்கள் எத்தனைபேரை சென்றடைந்திருக்கிறது ? நம் நாட்டின் மாணவர்களால் இந்தியாவின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தூதராக தெரிவு செய்யப்பட்டவர் அப்துல் கலாம். இந்த அறிவுஜீவிதான் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் நீலகிரியில் அமைவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொன்னவர். நீலகிரியின் சாதாரண விவசாயிக்கு உள்ள சுற்றுச்சூழல் ஞானம்கூட இல்லாத இந்த நபர் இந்தியாவின் சுற்றுச்சூழல் தூதராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்றால் நம் விழிப்புணர்வு எந்த அழகில் இருக்கிறது என்பது விளங்கும்.
பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இதுதான் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யும். சரியான திட்டமிடல் மூலமாக விவசாயம் செய்வதன் மூலம் இறக்குமதியை நாம் முழுமையாக தவிர்க்கமுடியும். சமையல் எண்ணையும் சர்கரையும் லட்சக்கணக்கான டன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் நிகழும் போக்குவரத்தையும் அதன் வாயிலாக ஏற்படும் வளிமண்டல மாசையும் குறைக்கமுடியும். ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க பல நுட்பங்கள் இருக்கின்றன, தேவை அதை கற்றுத்தரும் விவசாயத் துறை மட்டுமே . எல்லாவற்றிற்கும் மேலாக இடைத்தரகர்களையும் ஊக வணிகத்தையும் ஒழித்தால் விவசாயம் ஒரு லாபகரமான மற்றும் கௌரவமான தொழிலாக மாறிவிடும். சென்ற மாதம் திருச்சி வாழை மண்டியில் ஒரு வாழைத்தார் மூன்று ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது ( வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்ததன் மூலம்). இந்த நிலையில் ஒரு விவசாயி எந்த நம்பிக்கையில் ஏர்பிடிக்க முடியும் ?
காடுகளை பாதுகாப்பது மற்றுமொரு அவசர நடவடிக்கை. நம் நாட்டில் மீதமிருப்பது பதினோரு சதம் நிலப்பரப்பில் உள்ள காடுகள் மட்டுமே ( இருபது சதவிகித என்று மற்றோர் தகவல் சொல்கிறது ) அவையும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறது. அதில் கவனம் செலுத்தாமல் வீட்டுக்கு ஒரு மரம் நடுவது ஆளுக்கு ஒரு மரம் நடுவதெல்லாம் வெறும் கண்துடைப்பே.( அப்துல் கலாம் இன்னமும் போகுமிடமெல்லாம் ஆளுக்கு பத்து மரம் நடுவேன் என்று பார்ப்பவரிடமெல்லாம் சத்தியம் வாங்குகிறார் (பெரும்பாலும் வசதியானவர் வீட்டு குழந்தைகளிடம்).. ஒருவனும் நட்டதாகத்தான் தெரியவில்லை ). கார்பன் டை ஆக்சைடை கட்டுப்படுத்துவதும் இயற்கையின் சமநிலையை பாதுகாப்பதிலும் காடுகளுக்கு மாற்றே கிடையாது. வனப்பரப்பில் திட்டமிடப்பட்டிருக்கும்  எல்லா சுரங்கப்பணிகளும் கைவிடப்படுவது அவசர அவசியம். குறைந்தபட்சம் இந்தியா விடுதலை அடைந்தபோது இருந்த அளவுக்கேனும் வனப்பரப்பு மேம்படுத்தவேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களின் உபயோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் பொதுப்போக்குவரத்து பரவலாக்கப்பட வேண்டும். வாகனப்பெருக்கம் ஒரு மோசமான அறிகுறியாகத்தான் கருதப்படவேண்டும் எப்படி அதிகரிக்கும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறதோ  அப்படி. கார்களுக்கு கூடுதல் வரியும் ஒரு வீட்டில் வாங்கப்படு இரண்டாவது காருக்கு இன்னும் கடுமையான வரிவிதிப்புக்களும் தேவை. கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புக்கள், மருத்துவவசதி, கல்வி என அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டால் நகரங்களில் ஏற்படும் மக்கள் செறிவை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். அரசின் பெருமளவு நிதியை விழுங்குவது நகரங்கள் தான். கூவத்தை சுத்திகரிக்க மட்டும் ஆயிரத்து இருநூறு கோடி செலவாகப்போகிறது என்பதை கவனத்தில் வையுங்கள்.
அரசின் இன்னுமொரு முக்கியக்கடமை புவிவெப்பமயமாவதால் பாதிக்கப்படப்போகும் நாடுகளுக்காவும் மக்களுக்காகவும் கவலைப்படுவதும் கடமையாற்றுவதும்தான். பொலிவியாவுக்கும் கோஸ்டாரிகாவுக்கும் உலக மக்களின் மீது உள்ள அக்கறை நூற்று பதினேழுகோடி மக்களைக் கொண்ட இல்லை என்பது அவமானத்துக்குரியது (சிறிய நாடுகள்தான் மக்களைப் பற்றி கோபன் ஹேகனில் சிறிதளவேனும் கவலைப்பட்டன.. இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகள் வேடிக்கை மட்டுமே பார்த்தன )  அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாட்டில் ஒரு நியாயமான தீர்வு ஏற்படாத நிலையிலும் இத்தனை பெரிய தேசத்தின் பிரதமர் புளிமூட்டை மாதிரி உட்கார்ந்திருந்தார் என்பது ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுனிய  வேண்டிய செய்தி இல்லையா?.
இன்னும் ஏராளம் இருக்கிறது, ஆனால் எதையும் செய்யக்கூடிய அரசு இங்கில்லை. காடுகளை பாதுகாப்பதற்கு முயற்சி செய்தால் டாடாவும் ஜிண்டாலும் லாபம் பார்க்கமுடியாது. கார்களின் மீது கூடுதல் வரிவிதித்தால் ஹூண்டாயும் ஃபோர்டும் என்னாவது ? இறக்குமதி என்பது இன்னுமொரு பணம் கொழிக்கும் துறை ( சர்க்கரை இறக்குமதியில் கிலோவுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் என்று தகவல் ), எனவே விவசாயம் சார்ந்த பொருளாதாரம் என்பதும் சாத்தியப்படப் போவதில்லை. உள்ளூர் காடுகளை அழிப்பதும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதும் ஆளுங்கட்சிக்காரர்களின் பகுதிநேரத்தொழில், ஆக அதுவும் தொடரத்தான் போகிறது. வெள்ளைமாளிகையின் பூந்தோட்டக் காவல்காரர் மன்மோகன் அமெரிக்காவின் அனுமதியில்லாமல் கொட்டாவிகூட விட மாட்டார், அவர் எந்தக்காலத்தில் உலக மக்களுக்காக கவலைப்படுவார் ? 2008 ஆம் ஆண்டு இந்தியா தள்ளுபடி செய்த சுங்க வரி மட்டும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 593 கோடி ரூபாய், ஆனால் பருப்பு விலை இருமடங்கு உயர்ந்தபோது இந்த தர்மபிரபுக்கள் துரும்பைக்கூட அசைக்கவில்லை. நமது அரசுகள் மக்களை பற்றி கவலைப்படுவதென்பது ஹாலுசினேஷனில்தான் சாத்தியம். ஆகவே இந்த விசயத்தில் ஏதாவது நடக்கவேண்டுமென்றால் அதற்கான வேலையையும் நாம்தான் செய்யவேண்டும்.
என்ன செய்வது ? வேறு வழியே கிடையாது இது எல்லாவற்றையும் செய்யும்படி நம் அரசுகளை நிர்பந்தம் செய்துதான் ஆகவேண்டும்.ஊட்டி நிலச்சரிவுக்கு காரணமானவர்கள் யாரும் அதில் சாகவில்லை, போய்ச்சேர்ந்தவர்கள் எல்லோருமே அப்பாவிகள். பஞ்சமும் தொற்றுநோயும் உங்களையும் என்னையும்தான் தாக்கும். அம்பானியும் மன்மோகனும் அதனால் பாதிக்கப்படப்போவதில்லையென்பதால் அதுபற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். பூடானின் ஏழு லட்சம் மக்களால் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடுக்கு நிகரான அளவு கார்பன் டை ஆக்சைடு வெறும் இருபது ஆயிரம் அமெரிக்க மக்களால் வெளியேற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ? இந்த ஒரு தரப்பு மக்களின் ஆடம்பரத்தின் விளைவுகளுக்கு எதிராக குரல் எழுப்புவது நம் கடமை இல்லையா? மாலத்தீவு எனும் தேசம் மூழ்கிவிடாமல் இருக்க இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைதான் நாளை நமக்கடுத்து வாழப்போகும் தலைமுறையின் நலவாழ்வை உறுதி செய்யும்.
நமக்கு காலம் கடந்துவிடவில்லை என்றாலும் தாமதிக்கவும் நம்மிடம் அவகாசம் இல்லை. இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அதேவேளையில் நாமும் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் நம் தேவைகளை குறைத்துக்கொள்ளவேண்டும். கூடுமானவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்துங்கள். பெட்ரோலையும் மின்சாரத்தையும் பயன்படுத்தும் முன் அதன் பின்விளைவுகளை எண்ணிப்பாருங்கள் ( ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரை கிலோ நிலக்கரி எரிக்கப்படவேண்டும் ) . முத்துக்குமாரும்  வேதாரண்யம் சுகந்தி டீச்சரும் தியாகம் செய்வதில் டிப்ளமோ பெற்றுவிட்டு உயிரைவிடவில்லை, அடுத்த மனிதனின் துன்பத்தை சகிக்க முடியாத அவர்களது மனிதாபிமானம் அவர்களை செயல்படவைத்தது. ஆகவே பெரிய போராட்டங்களையும் சிறிய தியாகங்களை செய்வதால் நாம் ஒன்றும் குறைந்துவிட மாட்டோம். சுயநலமாக யோசித்தாலும் நம் குழந்தைகளுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு இதுவாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment