சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பது அறியப்படாமல், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கப்படுகிறது. இவ்விலங்கிற்கு "கருங் குரங்கு" என்றொரு பெயருமுண்டு
உடல் அமைப்பு
இவ்விலங்கின் வெளிமயிர் கருப்பு நிறத்திலானது. இதன் வெள்ளை அல்லது வெள்ளி நிறத்திலான பிடரிப் பகுதியின் மயிர்கள் இவ்விலங்கிற்கே உரிய சிறப்பாகும். இதன் முகப்பகுதி மயிர்கள் ஏதுமின்றி கருப்பு நிறத்தில் காணப்படும். தலை முதல் வால் வரையிலான நீளம் 45 முதல் 60 செ. மீ ஆகும் மற்றும் இதன் உடல் எடை 3 முதல் 10 கிலோகிராம் வரை இருக்கும். இதன் வால் பகுதி மட்டும் சுமார் 25 செ. மீ நீளமாகும் மற்றும் வாலின் நுனிப்பகுதியில் கருப்பு நிறத்திலான ஒரு மயிர் கொத்து இருக்கும். இம்மயிர் கொத்து ஆண் மந்திகளுக்கு மிகுதியாகவும், பெண் மந்திகளுக்கு சற்று குறைந்தும் காணப்படும்.
வாழ்க்கை முறை/நடத்தை
வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வசிக்கும் சோலைமந்தி பகற்பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும்பகலாடியாகும். மரமேறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இம்மந்தி தன் பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களை தவிர்த்தே வாழவிரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களை கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தையைக் கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண்களும் பல பெண்களும் காணப்படும். ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும்.
இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 6 மாதங்களாகும். பிறந்ததிலிருந்து ஒருவருட காலம் வரை குட்டி தன் தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள் எனவும்; விலங்குக்காட்சியகங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சூழியல்:
சோலைமந்திகள் மலைகாடுகளின் மரக்கிளைகளில் மட்டும் வாழக்கூடிய ஒர் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை கொண்டவை. இவை பழங்கள், இலைகள், பூவின் மொக்குகள், பூச்சிகள்மற்றும் சிறு முதுகெலும்பற்ற விலங்குகளை உண்கின்றன. இம்மந்திகள் பகற்பொழுதில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. இது மிகவும் விரும்பி உண்ணும் பழவகைகள் மேற்குத் தொடர்சி மலைகளில் மட்டும் காணப்படும் மரங்களில் கிடைக்கக்கூடியவை.காப்பு நிலை
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN) அண்மைய கணக்கெடுப்பின்படி சோலைமந்தியின் மொத்த உயிர்த்தொகை சுமார் 2500 ஆகும். உலகிலுள்ள முதனிகளில் மிகவும் அரிய மற்றும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதனி சோலைமந்திகளாகும். இவை தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பசுமைமாறாக் காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் சாகுபடியால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் சோலைமந்திகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன.
காணப்படும் இடங்கள்
- களக்காடு (தமிழ் நாடு)
- தேனி (தமிழ் நாடு)
- பொள்ளாச்சி (தமிழ் நாடு)
- வால்பாறை (தமிழ் நாடு)
- அமைதிப் பள்ளத்தாக்கு (கேரளா)
- குதிரேமுக்கு (கர்நாடகா)
- சிர்சி-ஹொன்னவரா (கர்நாடகா)
- மடிக்கேரி (கர்நாடகா)
No comments:
Post a Comment