இந்திய காண்டாமிருகம், இந்திய மூக்குக்கொம்பன் அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின்அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்ப்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது.
ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். இதனை 1758ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் "Rhinoceros" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் "rhino" என்றால் மூக்கு என்றும் "ceros"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும். தமிழில் இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர்.
பழக்கவழக்கங்கள்:
சமூகவாழ்க்கை
இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.
அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.
உணவு
இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.
இனப்பெருக்கம்
இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.
இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்னை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும்.
தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுக்கொள்ளும்.
காப்புநிலை
ஒரு காலத்தில் சிந்து சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்திய காண்டாமிருகம், தற்போது அசாமில் உள்ள பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நேப்பாளத்தில் உள்ள சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டும் தென்படுகிறது.[37] இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய காண்டாமிருகத்தைக் காப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன போதிலும் கள்ளச்சந்தையில் மிக அதிகமான விலைக்கு விற்கும் காண்டாமிருகத்தின் கொம்பினால், அடிக்கடி இவ்விலங்கு கொல்லப்படுகிறது. கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பரிய வைத்தியங்களில் இக்கொம்பு அதிகமாக உபயோகிக்கப்ப்டுகிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டிற்குள் அசாமி்ன் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 235 இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. கொம்பை வெட்டி எடுப்பதற்கு முதலில் விலங்கின் மீது மின்சாரம் பாய்ச்சியோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை கொடுத்தோ விலங்கைக் கொன்று பின் கொம்பை அறுத்துவிடுகிறார்கள்.
இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்ட உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க இந்தியா மற்றும் நேபாளத்தில் பல்வேறு மீள்அறிமுகப்படுத்தி விலங்கின் பரவலை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றது.மீள்அறிமுகப்படுத்திய உயிர்தொகை இந்தியாவில் துவ்வா தேசிய பூங்காகாவிலும், நேபாளத்தில் ராயல் பரிடியா தேசிய பூங்கா மற்றும் ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன

No comments:
Post a Comment