Thursday, 15 March 2012

யானை


யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
யானை இனங்கள்:
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங் கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங் கால்களில் ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.
உணவு:
யானைகள் மரம் உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.
இனப்பெருக்கம்:
யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.
படிமம்:ThaiElephantBaby.jpg
படிமம்:Lightmatter elephanttrunk.jpg

No comments:

Post a Comment